RSS

திருக்குறளில் தமிழிசை



தினையளவு போதாச் சிறுப்புன்னீர் நீண்ட
பணையளவு காட்டும் படித்தான் - மனைய
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

என்று கூறுகிறார் கபிலர். இதன் பொருள், இல்லத்தரசியார்கள் நெல்லை உரலிலிட்டுக் குத்தும் போது பாடும் இன்னிசையில் வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் கண்ணுறங்குகின்ற வளநாட்டு மன்னனே! புல்லின் நுனியில் உள்ள தினை அரிசியைவிடச் சிறியதாக உள்ள பனிநீர், பெரிய பனை மரத்தின் அளவான நிழலைக் காட்டுவது போன்று திருவள்ளுவரால் பாடப்பட்ட குறள் வெண்பா மிகப் பெரிய பொருளைத் தன்னுள் கொண்டுள்ளது.
அணுவைத் துளைதேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
என்பது ஔவையாரின் வாக்கு, அணுவைத் துளைச் செய்து அதனுள் ஏழு கடல் நீரைப் புகுத்தியது போன்று குறுகிய இரண்டடிப் பாடலின் உள்ளே மனித குலத்தின் வாழ்க்கைச் சட்டத்தை அமைத்ததே திருவள்ளுவரின் குறட்பாவாகும்.
பண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுத் திகழ்கிறது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சான்றோர்களால் போற்றப் பெற்று வருகின்றது. அறவாழ்விற்குத் தெளிவான வழிக்காட்டி திருக்குறளே ஆகும். மனித வாழ்வைச் செழுமைப்படுத்த நம் கையில் இருக்கும் அற்புத நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகாது. திருக்குறளில் பல குறிப்புகளும் பல அர்புதங்களும் நிறைந்திருக்கின்றன. திருக்குறளைப் படிப்பதற்கு, காண்பதற்கு, கேட்பதற்கு, உய்துணர்வதற்கு இப்பிறவி போதாது, இப்பிறவியில் இவை அனைத்தும் செய்வதற்கு என்ன தவம் செய்ததோ இந்த மானிட குலம்.
தமிழை இயல், இசை, நாடகம் என முத்திறமாக்கினர் பண்டைச் சான்றோர். இத்தகைய எழிலார்ந்த பகுப்பு முறை இன்றளவும் பிறமொழி எதனிலும் காணப்படவில்லை. திருக்குறள் உணர்த்தப் பெறும் செய்திகள் கணக்கிலடங்கா. திருவள்ளுவர் பெருமான், தமிழர்களுக்குச் சொந்தமான, பின்பு தழுவிச் சென்ற தமிழிசைக் கூறுகளைத் திருக்குறளில் பயன்படுத்தியுள்ளார். தமிழ் மக்களின் கலை, இலக்கியம் என்பது திருவள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே மிகச் சிறப்பாக விளங்கியதை அவரது குறட்பாக்கள் தெரிவிக்கின்றன. முத்தமிழில் ஒன்றான இசைக்கலை தமிழர்களிடம் எங்ஙனம் பரவியிருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்றாக இருந்தாலும், அதற்கு முன்னரே இசையும் இசைக்கருவிகளும் தமிழர்களிடம் இருந்துள்ளன என்பதை திருக்குறளில் அணிநயங்களோடு திருவள்ளுவர் புனைந்துள்ளார்.
இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசைய வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்று குறிப்பிடுகிறார் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள். இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். பண், இசை நுணுக்கங்கள், யாழ், குழல் மற்றும் பறைப் போன்ற இசைக்குறிப்புகளை திருக்குறளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு              (குறள் 231)
இக்குறளின் பொருளானது வறியவருக்கு வழங்க வேண்டும். அதனால் புகழ் உண்டாக வேண்டும். அதைவிடச் சிறந்த பயன் உயிருக்கு இல்லை.
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் 
கழல் யாப்பு காரிகை நீர்த்து.            (குறள் 777) 
இக்குறளின் பொருளானது பரந்து நிற்கும் புகழை விரும்பி உயிர் வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்
இவ்விரண்டு குறட்களிலும் “இசை” எனும் சொல் வந்திருப்பினும், “புகழ்” என்றும் “பெருமை” என்றுமே பொருள் கொள்ளப் படுகின்றது. திருவள்ளுவர் புகழ் மற்றும் பெருமை என்ற சொல்லை இசையுடன் உவமைப்படுத்தி கூறியுள்ளார்.
கண்ணோட்டம் என்ற அதிகாரத்தில், கண்ணோட்டம் இல்லாத கண்ணை உணர்த்திய வள்ளுவனார் அதற்கு உவமையாகப் பண்ணினைக் கூறி விளங்க வைத்துள்ளார். பண்ணின் சிறப்பைத் தெளிவாக உணர்ந்த வள்ளுவர், அதனையும் உணர்த்த வேண்டியதொன்றாக கருதி, உவமையாக அதனை அமைத்து உவமை மிகும் பான்மையில் புகழ்ந்துள்ளார்.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்         (குறள் 573)
 பாடும் தொழிலோடு பொருத்தமில்லாத பண்ணினால் என்ன பயன்? அதேபோல், கண்ணோட்டம் அதாவது கண்ணொளி இல்லாத கண்ணினால் என்ன பயன் என்பது பாடலின் தெளிவான பொருள். கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அதே போன்று பண்ணிற்கு அணிகலம் பாடல். எவராகினும் அல்லது அரசனுக்குக் கண்ணோட்டம் எவ்வாறு இருத்தல் வேண்டுமோ, அவ்வாறே யாவராலும் விரும்பிக் கேட்கும் பண்ணும் பாடலோடு தவழ்ந்தோடிப் பயன்தர வல்லதாய் இருத்தல் வேண்டும். இதற்கு உரை வகுத்த பரிமேலழகர், இசைத் தமிழின் இயல்பறிந்து வளமான உரைக் குறிப்பை வழங்கியுள்ளார். பரிமேலழகரும் பாலையாழ் முதலிய நூற்று மூன்று பண்கள் இருப்பதைக் கூறியுள்ளார். இவை ஒவ்வொன்றும் பாடலோடு பாடற்றொழிலில் முறையில் எவ்வாறு இயங்குமோ, அவ்வாறெல்லாம் கண்ணோட்டம் இருத்தல் வேண்டும் என்றுக் கூறுகிறார்.
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். எளிமையாக கூறினால் இராகம் எனலாம். கர்நாடக சங்கீததில் இராகம் என்று கூறப்பட்டுள்ள இதையே தமிழிசையில் பண் என்று கூறப்படுகிறது. தற்போதைய இசையில் பண் என்ற சொல் மறைக்கப்பட்டு இராகம் என்று சொல் மேலோங்கி கர்நாடக சங்கீதத்தில் உள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு அடிப்படையே தமிழிசைத்தான் என்பது திருவள்ளுவர் மூலம் குறளின் பயன்பாட்டில் அறிகிறோம்.
வள்ளுவர் இசை நுணுக்கங்களையும் பற்றி கூறுகிறதைக் குறள்களில் அறிகிறோம்
சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு                   (குறள் 821) 
இக்குறளின் பொருளானது, அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும் என்று தனது உரையில் கூறுகிறார் டாக்டர் மு.வ அவர்கள்.
பட்டடை என்றால் எழு சுரங்களில் ஏதாவது ஒரு சுரமும் அதற்கு மேல் வரும் ஐந்தாவது சுரம் இளி (ப) சுரமும் கொண்டுள்ள உறவு ஆகும். சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில், கானல் வரியில் இளங்கோவடிகள் வண்ணப்பட்டை என்று பயன்படுத்தியுள்ளார். யாழ் நரம்புகளின் இளியை(ப) பட்டடை என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழிசையில் பாடலை அடிகளாகப் பிரித்து, அடிகளைச் சீராக பிரித்து பின்பு சீர் அசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இசைப் பாட்டுக்கான சுரங்களை அசைகளுக்கான எழுத்துக்களின் ஒலிகளுக்கு பொருத்தமாக நிரப்பபடுகின்றன. அவ்வாறு சீருக்குள் உள்ள சுரங்களில் ஒரு சுரத்திற்கு அடுத்து பட்டடை உறவில் (அச்சுரத்திற்கு மேல் ஐந்தாவது ) உள்ள சுரம் வரக்கூடும். இக்குறளுக்கு பின் வருமாறும் பொருள் கொள்ளலாம். பாட்டில் வரும் ஒரு சீருக்குள் பட்டடைக்கான இடத்தைக் காணும்போது, அதற்கான சுரத்தினை இசை எழுப்புபவர்கள், அந்த சுரத்தினை அந்த சீருக்குள் சரியாக எறிதல் வேண்டும். பொருந்தாத சுரம் பொருத்தப்படுமேயானால் அகத்தில் பொருந்தாமல் புறத்தில் பொருந்திய பட்டடையாகும். அப்போது பண்ணிசை இனிமை தராது. அது அகத்தில் பொருந்தாமல் புறத்தில் பொருந்திய நட்புக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. 
தமிழ்ப் பண்ணையும், இசை நுணுக்கங்களையும் உணர்த்திய வள்ளுவப் பெருந்தகையார், இசை தொழிலுக்கான கருவிகள் சிலவற்றையும் உணர்த்துகின்றார். முதலில் தோன்றியதாகக் கருதப்படும் காற்றுக் கருவியான குழல், தோல் கருவியான பறை மற்றும் நரம்புக் கருவியான யாழ் இவை மூன்றும் திருக்குறளில் காணப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று.  இசைக்கருவிகளுல் மூவகைக் கருவிகளையே மொழிந்துள்ளார். தமிழிசையும் தமிழிசைக்கருவிகளும் மனித வாழ்வில் ஒன்றற கலந்திருப்பதை வள்ளுவர் சுட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக, அதிகாரம் 7ல் 66 ஆம் குறள்.
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.           (குறள் 66)
இக்குறள்களின் பொருளானது, தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேளாதவர்களே குழல் ஓசை இனியது, யாழ் இசை இனியது என்று கூறுவர். 28ஆம் அதிகாரத்தில் 279 ஆம் குறளான
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.           (குறள் 279)
இக்குறள்களின் பொருளானது, அம்பு நேர் தோற்றம் உடையதாயினும் கொடியது. யாழின் கொம்பு வளைவாகத் தோன்றினாலும் கேடற்றது. அது போல் மக்களின் பண்புகளையும் செயல் வகையால் அறியலாம்.
இவ்விரு பாடல்களிலும் முறையே துளைக்கருவியாகிய குழலும், நரம்புக் கருவியாகிய யாழும் உணர்த்தப்படுகின்றன. இவ்விரு பாடல்களாலும் இருவகை கருவிகளின் இன்பத்தையும் யாழிசை இன்பத்தையும் வள்ளுவனார் துய்த்து இன்புற்றார் என்று கூறுதல் மிகவும் பொருத்தமாகும். பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் மற்றும் குழல் என்ற இசைக்கருவிகள் பயன்பாட்டில் இருந்துள்ளது. திருக்குறள் மட்டுமின்றி மற்ற தமிழ் இலக்கியங்களில் மிக பரவலாகப் பயன்படுத்தப்பட்ட தமிழிசைக் கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும். தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழகரம்”. “யாழ்” மற்றும் “குழல்” என்ற சொல்லில் “ழகரம்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது இவை தமிழுக்குரிய இசைக்கருவிகள் என்று. 
யாழின் வகைகள் பல. அவை பேரியாழ் (21 நரம்புகளை உடையது)  மகரயாழ் (17 நரம்புகளை உடையது)  சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது). 3 வகைக் குழல்கள் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. அவை கொன்றைக் குழல், ஆம்பர் குழல் மற்றும் முல்லைக் குழல் ஆகும்.
மேலும் தாளவிசைக் கருவிகளில் ‘பறை’ மிகுதியாகப் பேசப்படுகிறது. பறையைக் குறித்த குறிப்புகள் திருக்குறளில் மூன்று இடங்களில் வந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது. கயமை என்ற 108 ஆவது அதிகாரத்தில் கயவர்களின் இயல்பு பற்றி இவ்வாறு கூறுகிறார்.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.            (குறள் 1076)
தாம் கேட்ட இரகசியமான செய்திகளைத் தாங்கிச் சென்று, அவற்றைப் பிறருக்குக் கூறும் கயவர், அறையப்படும் பறையினை ஒப்பர். பிறரிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன செய்தியைப் பலருக்கும் ஒருவன் தெரிவிப்பதைக் கயவன் என்று குறள் கூறுகிறது. பறை, ஒருவன் கையால் தன்னை அறிவித்த ஒன்றினை இடந்தோறும் கொண்டு சென்று அறிவிக்கும். இக்குறட்ப்பாவில் பறை என்னும் தோற்கருவியையும் அதை இசைக்கும் தொழிலினையும் உணர்த்தியுள்ளார். இப்பறை என்னும் தோற்கருவி அரங்கிசைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பறை இசைப்போர் பாடி மகிழும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் முழக்கப் பெறும்.
ஓர் அழகிய பெண்ணை அவளுடைய அழகை ஆடவன் வருணிக்கும் போது அதில் மிகையே மிகுந்திருக்கும். இதை வள்ளுவர் நலம் புனைந்துரைத்தல் எனும் 112ஆவது அதிகாரத்தில் கூறியுள்ளார்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை                            (குறள் 1115)
தன் மென்மை கருதாது, அனிச்சப்பூவின் காம்புகளை நீக்காது சூடினாள் நங்கை ஒருத்தி. அதன் பாரம் தாங்காமல் இடை முறிந்தால் அப்போது சாப்பறை ஒலிக்கப்படுமே என்று உரையில் கூறுகிறார் பரிமேலழகர். பறை எனும் தோல்கருவியில் கண் என்பது 'இம்' மென ஒலி தரும் பகுதியாகும்.
இதையடுத்து, தலைவனுடைய இயல்பை மறைக்க வேண்டுமென்று தோழிக்கு ஒரு தலைவி கூறுவதாக கண்விதுப்பழிதல் எனும் 118ஆம் அதிகாரத்தில் அமைந்துள்ளது இக்குறள்.
மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.                    (குறள் 1180)
பறையறிவிப்பது போல் துயரத்தை வெளியிடும் கண்களை உடைய எம்போன்றவரிடமிருந்து மறை செயலையும் ஊரார் அறிவது எளிது என்று பொருள்படுகிறது இக்குறள். பழங்காலத்தில் பறை, அறிவிப்புக்குத் தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி என்பதை உணர்த்துகிறது குறள். பறை மற்ற தோற்கருவிகளைப் போன்று தோலால் போர்த்தப்பட்டது. பறையை அடித்து அதாவது பறையறைந்து செய்திகளை கொண்டு சேர்க்க, போர் அறிவிப்புச் செய்ய மற்றும் இசைப்பாட்டிற்குப் பக்க இசைக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பறை பல வகைப்படுகின்றது, அவை, அரிப்பறை, கணப்பறை, கோட்பறை, சிறுபறை, பெரும்பறை, ஒருகட்பறை, மும்முகப்பறை, தொண்டகப்பறை, நாழிகைப்பறை என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
வள்ளுவ பெருந்தகயார் உணர்த்திய பண்ணும், படற்றொழிலும், இசைக்கருவிகளும் தமிழின் வளத்தை,, இசைத் தமிழின் வளத்தைப் பெருக்குவனவாகவே உள்ளன. திருக்குறளில் பண் மற்றும் இசை நுணுக்கங்களை மட்டுமல்லாத்யு இசைக் கருவிகளான குழல், யாழ், பறை,  குறிப்பிடும் குறள்கள் காணப்படுகின்றன. இதன் முலம் அக்காலத் தமிழ் மக்கள் இசையின் சிறப்பினை அறிந்திருந்தனர் என்றும், திருவள்ளுவரும் ஓர் இசை அறிஞராக இருந்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS