RSS

பண்டைய இசைப்பாடல்கள்


(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

பழந்தமிழ் இசையும் இசைப்பாடல்களும் யாழ்களுடன் தொடர்புடையன. சங்ககால இசைப்பாட்டு உருக்களுக்கு எடுத்துக்காட்டாக இன்று நமக்குக் கிடைப்பன பரிபாடல்களே. இவற்றில், பாட்டுக்களை இயற்றிய ஆசிரியர்களே இசையமைத்த பாடல்களும் உண்டு; பாடிய கவிஞர் ஒருவராகவும் இசையமைத்த கலைஞர் வேறொருவராகவும் அமைந்த பாடல்களும் உண்டு. இவைகள் பண்சுமந்த பாடல்களே. இப்பரிபாடல்களில் பல நீண்ட நெடும் பாடல்கள்; 100 வரிகளுக்கும் மேல் அமைந்த பாடல்களும் உண்டு. இப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர். பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர் பரிபாடல் வெண்பா யாப்பினதே என்றார்.(செய்118). பரிபாடல் வெண்பா உறுப்பாக வரினும் இன்னபா என்பது உணரப்படாமல் பொதுப்பட நிற்றற்கு உரித்து என்று கூறுகிறது, தொல்காப்பியம்.. (செய்120).
தொல்காப்பியம் செய்யுளியல் உரையாசிரியர்கள் தேவபாணி என்னும் கடவுளரைப் பாடும் பாட்டு வகைக்கு எடுத்துக் காட்டாக வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் அமைந்த பாடல்களைக் காட்டியுள்ளனர். இவையும் நெடும்பாட்டுக்களே. பரிபாடல் இசைப்பாடல்; தேவபாணி இசைப்பாடலா அன்றி இயற்பாடலா என்பது தெரியவில்லை. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு இசையமைத்ததாகக் குறிப்பேதும் கிடைக்கவில்லை. பரிபாடல், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும் தரவு, கொச்சகம், அராகம், சுரிதகம் போன்ற ஒத்த உறுப்புக்கள் உண்டு. (செய்121). இவை யிரண்டும் கடவுள் வாழ்த்தினும் மலைவிளையாட்டினும் புனல் விளையாட்டினும் பிறவெல்லாவற்றிலும் காமப்பொருளாகியே வரும். (செய்.121 பேரா. உரை)
தமிழுலகில் முதன்முதலில் இசையை இறைவழிபாடாக , ‘இசைமுழுவதும் மெய்யறிவே இடங்கொளும் நிலைபெருகச்செய்த பெருமை திருஞானசம்பந்தருக்கே உரியது.
யாழிசை
சங்ககால இசையமைப்பைப் பற்றி அறிந்துகொள்ள யாழின் பயன்பாட்டை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
பண்வகைகளையாழின் பகுதிஎனவும் இசைநூலைநரம்பின் மறைஎனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளார்.இதனால், பண்டைநாளில், நரப்புக் கருவியாகிய யாழினை நிலைக்களனாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
பியானோ, ஹார்மோனியம் போல அக்காலத்தில் வழக்கில் இருந்த எல்லாவகை யாழ்களும் விட்டிசைக்கும் கருவிகளே. (Digital Instrument). ஒரு நரம்பு ஒரு சுருதியை மட்டுமே ஒலிக்கும். யாழில் கூட்டப்பட்ட பாலை யாதோ அதை மட்டுமே வாசிக்க முடியும்.ஒருசுரத்தை மீட்டினால் அதுவே தொடர்ந்து ஒலிக்குமன்றி அடுத்த சுரத்தினொடு இயைபுபடாது. (பாலை என்பது ஆரோகணம் அவரோகணமாக அமைந்த சுரங்களின் வட்டம், “ஏரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் , ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டிசிலம்பு 3:70-1 பாலை -scale)
யாழிசையும் மிடற்றிசையும்
சங்ககாலத்தில் யாழிசைக்கும் மிடற்றிசைக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. யாழிசையின் அடிப்படையில்தான் மிடற்றிசை வழங்கியது. அதாவது மிடற்றுப்பாடல் யாழிசையோடு சேர்த்துத்தான் பாடப்பட்டது. மிடறும் நரம்பும் இடைதெரிவின்றி இசைக்கப் பெறுதல் வேண்டும் என்பது பண்டைய இசை நியதி. மிடற்றிசை யாழிசையோடு பருந்தின் நிழல்போல ஒன்றியிருக்க வேண்டும் என்பது விதி..
அக்காலத்தில் ஆதார சுருதி இசைப்பதற்கானசுருதிப் பெட்டி’, தம்புரா போன்ற கருவிகள் இல்லை. எனவே, முதலில் மிடற்றிசைக் கேற்ற சுருதி குழலில் சேர்க்கப்படும். பின்னர், குழல் வழி யாழும் யாழ் இசையின் வழி முழவு முதலிய கருவிகளின் ஓசையும் அமையும். குழல்வழி யாழும் யாழின் வழி மிடற்றிசையும் அமைந்தன.(சிலம்பு 3:139 -153. ‘மிடற்று மட்டமும் யாழ் வழித்து’. அரும்பதவுரை)
இந்த நிலை குறித்து. இயலும் இசையும் துறை போகிய அறிஞர். பி.டி.ஆர். கமலைத்தியாகராசன், அவர் எழுதியஇசைத்தமிழின் உண்மை வரலாறுஎன்னும் ஆய்வு நூலில் கூறுவதாவது: “முதல்நிலைக் கருவியான மிடறும் கடைநிலைக் கருவியான யாழும் பருந்தும் நிழலும் போல இயங்கவேண்டுமானால், மிடறு தன்னிலையில் இறங்கிக், கடைநிலைக் கருவியான யாழின் குறைகளுக்கு உட்படு இயங்க வேண்டும். யாழோடு பாடினால் கமகங்கள் இல்லாமல் பாட வேண்டும் என்பது உறுதி. “
இதற்குச் சீவக சிந்தாமணி என்னும் நூலில் இடம்பெறும் நிகழ்ச்சியொன்றைச் சான்றாகச் சுட்டிக் காட்டினார். இக்காப்பியத்தில் ஒரு இசைப்போட்டி நடைபெறுகின்றது. உதயணன் என்பானும் காந்தருவதத்தை என்னும் பெண்ணும் போட்டியிடுகின்றனர். எவ்வளவோ திறமையாகப் பாடிய காந்தருவதத்தையும்கம்பிதத்துடன்பாடியதால் தோற்றதாக அறிவிக்கப்பட்டாள். அதாவது, சீவகன் வாசித்த யாழில் வராத கமகம் அவள் பாட்டில் வந்ததால் அவள் தோற்றாள் என அறிவிக்கப்பட்டது. யாழின் குறைகளுக்கு உட்பட்டுத்தான் பாட வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் கமகம் இல்லாமல்தான் பாடவேண்டும்; பாடிக்கொண்டு இருந்தனர் எனக்கொள்ளுதல் வேண்டும்.”
சங்கீத இரத்தினாகரம் எனும் இசை இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதிய அறிஞர், தென்னாட்டு இசைக்கு உயிர் போன்ற கமகங்கள் இல்லாமல் தேவாரம் ஒருகாலத்தில் பாடப்பட்டது என்பதை நினைப்பது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும் என்கிறார்.
இன்று தென்னக இசைக்குத் தனித்தன்மையும் சிறப்பும் கொடுப்பது தசவித கமகங்களே. கமகங்களோடு கூடிய இசைமரபுக்கு வித்திட்டவர் திருஞானசம்பந்தரே என்பது தென்னக இசைவரலாற்று அறிஞர்களின் உறுதியான கொள்கை.
நான் படித்த கட்டுரை.... உங்களுக்காக பகிர்ந்துகொல்கிறேன் அனைவரும் படித்து பயன்பெறுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS