RSS

வயலின் மன்னர்.... குன்னக்குடி வைத்தியநாதன்

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

குன்னக்குடி இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், மற்றும் இசையமைப்பாளர்.  1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் இராமசாமி சாஸ்த்திரி - மீனாட்சி ஆகியோருக்கு வைத்தியநாதன் பிறந்தார். கர்நாடக இசைக் கலைஞரான தனது தந்தை இராமசாமி சாஸ்த்திரியிடம் இளம் வயதிலேயே கற்கத் தொடங்கிய வைத்தியநாதன், வாய்ப்பாட்டுடன் வயலின் இசைக்கவும் கற்றுத் தேர்ந்தார். இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
12 வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்கேற்று சாதனை புரிந்த வைத்தியநாதன், கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய வித்தகர்களான அரியாக்குடி இராமானுஜ ஐயங்கர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மஹாராஜபுரம் சந்தானம், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார்.
கர்நாடக இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, நாகஸ்வர மேதைகள் திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை, திருவென்காடு சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தார். தனித்தும் இசைக் கச்சேரிகளை நடத்திய வைத்தியநாதன், கர்நாடக இசையை பாமர மக்களும் ரசிக்கும் வண்ணம், அவர்கள் மிகவும் ரசிக்கும் சிறந்த திரையிசைப் பாடல்களையும் இடையிடையே வாசித்து மகிழ்வித்தார். இசை வித்தகர்களில் இருந்து பாமர மக்கள் வரை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வைத்தியநாதன் என்றால் இசை மழை என்று பெருமை பேசும் அளவிற்கு இளம் வயதிலேயே புகழ் பெற்றார்.

திரையிசையமைப்பதிலும் பங்கேற்றுவந்த குன்னக்குடி வைத்தியநாதனை தனது வா ராஜா வா படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் .பி.நாகராஜன். அந்த படமும், பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து திருமலை தென்குமரி, தேவர் பிலிம்ஸ் தயாரித்த தெய்வம் படங்களுக்கு இசையமைத்தார் வைத்தியநாதன்.
தெய்வம் படத்தில் கர்நாடக இசை மேதை மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடல் மிகவும் பேசப்பட்டது. அப்பாடலை விழாக் காலங்களில் தமிழகம் முழுவதும் பயணித்து மதுரை சோமு பாடினார். அப்பாடலை தனது வயலினில் இசைத்து தனது வாழ்வின் இறுதிக் காலம் வரை மக்களை மகிழ்வித்து வந்தார் வைத்தியநாதன்.
22 தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு, திருமலை தென்குமரி திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுத்தந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் அளிக்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டவர் வைத்தியநாதன்.
வயலின் வாசிப்பில் பல புதுமைகளைச் செய்த வைத்தியநாதன், தவில் கலைஞர் வலையப்பட்டி சுப்ரமணியத்துடன் இணைந்து 3,000 கச்சேரிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அயல் நாடுகளுக்கும் சென்று வயலின் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ள வைத்தியநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதளித்து பெருமைபடுத்தியது.
சங்கீத நாடக அகாடமி, சங்கீத மாமணி, கர்நாடக இசை ஞானி போன்ற பெருமைமிக்க விருதுகளையும் வைத்தியநாதன் பெற்றுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலராகவும், திருவையாறு தியாகராஜர் விழாக் குழுவின் தலைவராக 28 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.

குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மனைவி பாகீரதி, சேகர், சீனிவாசன், ஸ்ரீதர், பாலசுப்ரமணியன் ஆகிய 4 மகன்களும், மகள் பானுமதி இராமகிருஷ்ணனும் உள்ளனர்.  இவர் 2008, செப்டம்பர் 8 ஆம் நாள் தனது 75 ஆவது வயதில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9மணியளவில் மாரடைப்பால் காலமானார்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிற திருமுறைகள்

நால்வர் அருளிய தேவார, திருவாசகம் நீங்கலாகப் பிற திருமுறைகள், பல சைவத் திருத்தொண்டர்களால் பாடல் பெற்ற பாடல்களை உடையன.
ஒன்பதாம் திருமுறை
திருமாளிகைத்தேவர்,     சேந்தனார்,     சேதிராயர், கண்டராதித்தர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, கருவூர்த்தேவர், வேணாட்டடிகள் ஆகிய ஒன்பதின்மர்     பாடிய  பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகும். ஓசை நயம் உடைய 301 பாடல்களைக் கொண்டு இத்திருமுறை ஒன்பதாம் திருமுறையாக அமைந்துள்ளது. இது இசைப் பாடல்களாக உள்ளது. சேந்தனார் பாடியது திருப்பல்லாண்டு.

பத்தாந் திருமுறை
 திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். காலத்தால் மூவர் முதலிகளுக்கு முந்தியவர். 5 அல்லது 6ஆம் நூற்றாண்டினர் எனலாம். தமிழகத்தில் தோன்றியமுதல் சித்தர்திருமூலர் என்பர். கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் உடையவர். ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்கள் பாடினார் என்பது தமிழ் மரபும், சித்தர் மரபும் கூறும் செய்தியாகும். மந்திரங்கள் போன்று செறிவாகவும், ஆழ்ந்த பொருள் உடையனவாகவும், மறைபொருள்கள் அமைந்தனவாகவும் பாடல்கள் உள்ளன. யோகநெறி, தத்துவக் கருத்துகள், சித்த வைத்தியக்     கருத்துகள்     பொதிந்துள்ளன. அன்புதான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் ; ‘அன்பே சிவம்என்று விளக்கமுறச் செய்தவர் திருமூலர். உள்ளம் பெருங்கோயில் என அக வழிபாட்டு முறையை மேற்கொண்டு ஒழுகியவர்; கடவுளிடத்துச் செலுத்தும் அன்பை மட்டுமல்லாமல் மக்களுக்குச் செய்யும் தொண்டையும் அன்பையும் அவர் வற்புறுத்தியுள்ளார்.
                                            
பதினோராம் திருமுறை
 பதினோராம் திருமுறை, திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமாள், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபில தேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிருவரின் 40 நூல்கள் இத்திருமுறையில் அடங்கும். மொத்தப் பாடல்கள் 1401.

காரைக்காலம்மையார்
 காரைக்காலம்மையார் காலத்தால் முந்தியவர் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டினர் எனலாம். இவ்வம்மையார் பாடியவை அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்பவை. எளிய சொற்களில், ஆழமான கருத்துகளைத் தெளிவாகக் கூறுவார். இறைவனால்     அம்மையே’!     என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். தம்முடைய சிவபக்தியைக் கண்டு ஒதுங்கிய கணவனுக்குப் பயன்படாத உடலை நீக்குமாறும், தனக்குப் பேய் வடிவம் தருமாறும் சிவனிடம் வேண்டிப் பெற்றவர். அந்தாதி, பதிக அமைப்பின் முன்னோடியாகவும் இசைப்பாடல்களுக்கு முன்னோடியாகவும் விளங்குபவர். சைவப் பெண்மணிகளுள் பாடல் பாடும் புலமை பெற்றவர் இவர் ஒருவரே என்னும் தகைமைக்குரியர். இவர் நூல்கள் சைவ சமயத்துப் பக்திப் பாடல்களுள் மிகப் பழமையானவை ; அவை பக்தியும் ஞானமும் நிரம்பிய பழம் பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன

பட்டினத்தார்
 திருவெண்காட்டு     அடிகள்     என்று கூறப்படுகின்ற பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாஒருபஃது ஆகிய நான்கு        நூல்களை எழுதியுள்ளார்.

நக்கீரர்
 நக்கீரர்     இயற்றிய     திருமுருகாற்றுப்படையும் இப்பதினோராம் திருமுறையில் ஒன்றாக விளங்குகின்றது. அவர்  இயற்றிய திருஎழுகூற்றிருக்கை முதலிய நூல்களும் இதில் அடங்கும். நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தரைப் பற்றி 5 நூல்களும் திருநாவுக்கரசரைப் பற்றி ஒரு நூலும் பாடியுள்ளார். மேலும் திருத்தொண்டர்களைச் சிறப்பிக்கும் திருத்தொண்டர் திருவந்தாதியும் பாடியுள்ளார்.

பன்னிரண்டாம் திருமுறை
திருத்தொண்டத்தொகை,     திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றின் கருத்துகளை விரிவுபடுத்தி, சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடியுள்ளார். இதுவே பன்னிரண்டாம் திருமுறையாகும். இதுவே பெரிய புராணம் என வழங்கப்படுகிறது. இது ஒரு தேசிய இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும் அழகாகக் கூறுகின்றது.

 பக்தியின்     மேன்மை, மக்கள் வாழ்க்கை முறை, திருத்தொண்டர்களின்     தொண்டின் சிறப்பு, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் பற்றிய செய்திகள் ஆகியவற்றை விளக்கமாகத் தெரிவிக்கின்றது இந்நூல்.
 பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவஎன்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத் தமிழில் சேக்கிழாரைப் போற்றியுள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முடியாதது முடியும்

படர்ந்து கிடக்கும் கடலை
பாயில் சுருட்டி மகிழ்ந்தேன்
வெள்ளை காகக் கூட்டம்
வானில் பறக்கக் கண்டேன்
பார்வைக்குப் படாத அணுவின்
பிரசவ வலியைக் கேட்டேன்
மங்கை சூடா தாமரையை
மணலில் நட்டு வளர்த்தேன்
வின்மீகளைக் கையில் பிடித்து
விளையாடி நேரம் கழித்தேன்
செவ்வாயில் பாய் விரித்து
சோளப் பொரி தின்றேன்
இரவின் கருமை நீங்க-வானில்
வெள்ளை அடித்து பார்த்தேன்
வானவில்லில் படுக்கை விரித்து
வசந்தமாக நானும் உறங்கினேன்
தவளை தன் குஞ்சுகளுக்குத்
 தாலாட்டுப் பாடக் கேட்டென்
---நித்தியவாணி---

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS