RSS

சைவ சமயப் பக்தி இலக்கியம்

நாயன்மார்களாகிய மூவர் முதலிகளும், மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர். அதே போன்று வைணவத்தின் பெருமையையும் சிறப்பையும் பாடியவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர். தமிழ்நாட்டில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் தொடங்கிய பக்தி இயக்கம் இந்தியா முழுவதிலும் பக்தி இலக்கியம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது.

சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல்களும் தேவாரம்     எனப்     பொதுப்பெயரால் அழைக்கப்பெற்றன. தே - தெய்வம், வாரம் - இசைப்பாட்டு. தெய்வத்தைப்பாடிய, தெய்வத்திடம் பாடிய இசைப் பாடல்கள் இவை. இம்மூவரும் பாடியவை ஆயிரக் கணக்கான பாடல்கள். நமக்கு இப்போது கிடைப்பவை : சம்பந்தர் பாடியவை 4158 பாடல்கள், நாவுக்கரசர் பாடியவை 3066 பாடல்கள், சுந்தரர் பாடியவை 1026 பாடல்கள். இத்தேவாரப் பாடல்கள் அனைத்தும் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் பெருமுயற்சியால் கிடைத்தன. எனவே அச்சோழ மன்னன் திருமுறை கண்ட சோழன் என அழைக்கப்பட்டான். நம்பியாண்டார் நம்பி இவற்றை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தினார்.

இதே போன்று ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்பட்டனர். அடுத்து வந்த ஒன்பதின்மரையும் சேர்த்துஆழ்வார்கள் பன்னிருவர் எனப்பட்டனர். அவர்கள் பாடிய பாடல்கள்     அனைத்தும் பாசுரங்கள் எனப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்றழைத்தனர். நாதமுனிகள் என்பவர் இதனைத் தொகுத்தவர் ஆவார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS