RSS

தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள்


பண்டைத் தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள் பல கூறப்படுகின்றன. அவை: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண் விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலியன. இவற்றின் பெயர்கள் யாவும் உருவத்தாலும், ஒலியாலும் அமைந்தவையாகும்.

இவற்றுள் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம், குடமுழா என்பவை இசைப்பாடலுக்குக் பக்க வாத்தியங்களாக உள்ளவை. இவை அகமுழவு எனப்படும்.

தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பவை மத்திமமான கருவிகளாகும். இவை அகப்புற முழவு எனப்படும்.

சல்லிகை, கரடிகை என்பவை ஓசையினால் பெயர் பெற்றவை. மத்து என்னும் ஓசையினால் மத்தளம் என்ற பெயர் உண்டாயிற்று. சல் என்னும் ஓசையையுடையதால் சல்லிகை என்று பெயர். கரடி கத்தினாற்போல் ஓசையுடமையால் கரடிகை என்ற பெயர்.

இடக்கை, ஆவஞ்சி என்றும், குடுக்கை என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இடக்கையால் வாசிக்கபடுவதால் இடக்கை என்றபெயர் பெற்றது. ஆவின் தோலால் போர்த்தப்பட்டதால் ஆவஞ்சி என்ற பெயரையும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் பெயர் உண்டாயின.


உறுமல் ஒலியை எழுப்புவது உறுமி. பம்பம் என்று ஒலிப்பது பம்பை. முர் முர் என்று ஒலிப்பது முருடு. மொகு மொகு என்று ஒலிப்பது தமருகம்.

தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசு ஆகும். இது வீரமுரசு, கொடை முரசு, மண முரசு, என்று மூவகைப்படும். போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீர முரசாகும். புலியோடு போராடி, அதனை தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்திச் செய்யப்படுவது மயிர்கண் முரசம் என்று நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர். இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்களத்தில் வீரவெறியூட்டும் தோற்கருவிகள் பல இருந்தன. அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம். இவ்விசைக்கருவிகள் யாவும் சேர்ந்து முழங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர் வெறிக்கொண்டு செருக்களம் நோக்குவர்.
சிலப்பதிகாரத்தில் 30 வகையான தோற்கருவிகள் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் வல்லோசையுள்ள வன்மைக் கருவிகள் 14; வன்மையுமின்றி மென்மையுமின்றிச் சமமான ஓசையுள்ளவை நான்கு, மெல்லோசையுள்ளவை 12 என வகுத்து, அவற்றையே உத்தம கருவிகள், அதமக் கருவிகள் என்று வகுத்துக் கூறப் பெற்றுள்ளன.

இவ்வாறு வகுக்கப் பெற்றுள்ள பிரிவுகளில் மிக்க வன்மையும், மிக்க மென்மையுமின்றி, சமமான ஓசையுடைய நான்கில் ஒன்றாகவும்,உத்தமமான கருவியாகவும் கொள்ளப் பெற்றுள்ளது 'மத்தளம்' என்ற தோற்கருவியாகும்.

மத்தளம் என்னும் தோற்கருவியைச் செய்வதற்கு வேங்கை, கருங்காலி, பலா, சிலை, மலையாத்தி, வேம்பு, செம்மரம் என்ற 7 வகை மரங்களும் ஏற்றவை. இவற்றுள் ஒரே வகை மரத்தில் 48 விரல் நீளம், இடப்புறத்தில் 14 விரல் அகலம், வலப்புறத்தில் 13 விரல் அகலம், வட்டம் 1/2 விரல் கனமும் உடையதாக அமைத்து மத்தளம் செய்யப் பெற வேண்டும் என்றும், மரத்தினால் செய்யப்பெற்ற அதன் இருப்புறங்களும் தோலால் மூடப் பெறுதல் வேண்டும் இழுத்துக் கட்டுதல் வேண்டும் என்றும் கூறப்படும் செய்திகளைப் பின்வரும் பாடல்கள் விளக்கும்

"வேங்கை கருங்கா வீறாம் பலாவுசிலை
தாங்கும் மலையாத்தி தானாகும்- பாங்கு நிம்பம்
செம்மரமும் ஆமே சிறப்புடைய மத்தளத்துக்கு
இம்மரம் என்று இயல்பு"

"உண்மை திகழும் விதிவத்துற்ற மரத்தால் நாற்பத்
தெண்விரலின் நீளம் இடப்புறத்தில்- நண்ணும்
பதினால் விரல் வலம்பாற் பண்பு பதின்மூன்றாய்
மதியாரை விரற் பிண்டமாம்"

இம்மத்தளமும் இக்காலத்துள்ள மிருதங்கமும் பெரும்பாலும் ஒன்றே என்று கூறலாம். இரண்டும் உருவ அமைப்பில், கையாளும் முறையில் ஒத்துள்ளன. ஆனால் ஒலிப்பதில் மட்டும் வேறுபாடுண்டு. மத்தளம் மிருதங்கத்தை விட ஓசை மிக்கது. மத்தளம் வெளியிடங்களில் வாசிக்க ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு அதில் இடமில்லை. மிருதங்கத்தின் ஓசை மென்பையானது. அடக்கமான இடங்களில் வாசிப்பதற்கு ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு இடமுண்டு. எனினும், வடிவத்திலும், உருவாக்கும் வகையிலும், கையாளும் முறையிலும் இரண்டும் ஒத்துள்ளன



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொலைந்த தமிழைசை

இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்று குறிப்பிடுகிறார் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள். இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும்

பாரம்பரிய இசை என்றாலே நமக்கு கர்நாடக சங்கீதம் தான் ஞாபகத்தில் எழும். கர்நாடக இசை என்ன என்பதை நாம் அறிவோம். ஆனால் தமிழிசை என்றால் என்ன என்பதை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? தமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே. வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம். இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் ”கர்நாட்டிசை” என்றனர்.  ஆங்கிலேயனும் அதை “கர்நாட்டிக் இசை” என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது. காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர். தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர்

இசை என்ற சொல்லுக்கு இசையவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசையவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது

கர்நாடக இசையென்று இப்பொழுது கூறப்படுகின்ற தமிழிசைக்கு வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் என்ற நூலே இலக்கண நூலாகக் கருதப்பெற்று வருகின்றது. ஆனால் உண்மையில் நம் தமிழ் இசையிலக்கணச் செம்பாகங்கள் சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் ஒவ்வொரு காதையினுள்ளும் இரத்தனமணிபோல நுட்பமாக பொதிந்துள்ளன --(மகா வித்வான் வா.சு கோமதி சங்கர் ஐயர்)--

இசையென்பது தமிழன் பண்பாட்டில் சிறப்பு வாய்ந்த கலையாகும். இக்கலை முழுக்க முழுக்க ஒலி உருவினாலாய கலவையே ஆகும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த ஒரு கலையை முதன்முதலாகக் கண்டவர்கள் நம் தமிழரே ஆவர். இசைக்கலையின் சிகரமாக விளங்குவது நிறமென்ற இராகமே ஆகும். இவ்வாறான நிறத்தை ஆளத்தி செய்வது என்பது தமிழிசையில் மட்டுமே. இவ்வழக்கு வேறு எந்த நாட்டின் இசைக்கலையிலுமே இல்லை. இத்துணை மாண்பு பெற்று அமைந்துள்ள இசைக்கலைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக உரைக்கப்படும் சிலப்பதிகாரம் என்ற நூலே இலக்கண நூலாக இப்போது மதிக்கப் பெறுகின்றது. அது காப்பிய இலக்கியமாக மட்டுமின்றி இசைக்குறிய இலக்கண நூல்தானென்று மதித்து ஏற்றுகொள்ளுதல் வேண்டும் (இசைத்தமிழ் இலக்கண விளக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம். சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம்.

     அடுத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் இசையிலக்கணத்தைச் செம்மையாகக் கூறும் நூலாக மதிக்கப்பெறுகின்றது.  சங்கீத இரத்தினாகரத்தை உற்று நோக்கினால் சிலப்பதிகாரத்தில் கூறப்பெற்றுள்ள இசைநுட்ப பகுதிகளே அங்கு வடமொழியில் வரப்பெறுதலைக் காணலாம். எனவே இவ்விரு நூல்களிலும் கூறப்பெறும் இசைச் செய்திகள் தான் இசையின் இலக்கணத்தை ஒன்றுபடுத்திக் காட்டுகின்றன.

தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு தெரிந்துகொள்ளலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலைப்பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.

தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே, தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்கிறார் டாக்டர் எஸ். இராமநாதன். தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும். இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன

     இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு  ரி      நீ  என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும். இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை.  

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமிழ் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை. இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.

தமிழ் மொழி தோன்றிய காலமே, தமிழிசைத் தோன்றிய காலம். தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல. இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல; கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும். அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும். இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு. மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்கிறார் ந.சி. கந்தையாபிள்ளை. இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். ‘பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே’ என்ற திவாகரச் சூத்திரம் பண்கள் மற்றும் திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.

தமிழிசைக் கருவிகளுக்குப் பெயரிட்ட தமிழ் மக்களும், தமிழுக்கென்று சிறப்பாக உள்ள “ழ” என்ற எழுத்தை அச்சொல் ஒவ்வொன்றிலும் வைத்து தோல் கருவிக்கு ‘முழவு’ என்றும், துளைக்கருவிக்கு ‘குழல்’ என்றும், நரம்புக் கருவிக்கு ‘யாழ்’ என்றும் பெயரிட்டிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழனின் சொத்து.

தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற பல தமிழிசை நூல்கள் காலத்தால் அழிந்து விட்டன. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் பல கீர்த்தனைகளை உருவாக்கினர். அவர்கள் கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் பாடினர். ஆனால் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள் ஆகும்.

மேலும், மாபெரும் தமிழிசை மேதை இலங்கை அரசன் இராவணனே. இராவணன் சிறந்த யாழ்பாணன் (யாழ் மீட்டுபவர்). அவன் இயற்றிய இசை நூலின் பெயர் இராவணியம் என்று சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியில் (ecyclopedia of tamil literature) குறிப்படப்பட்டுள்ளது. இராவணன் தமிழன் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழிசை அங்கும் குடிக்கொண்டிருந்தது என்று சொல்வதில் சிறிதும் ஐயமுல்லை

காலத்தால் தமிழிசை மட்டுமல்லாமல் தமிழிசைக் கருவிகளும் பல நம் கைவிட்டு நழுவி தற்போது திரிந்து வேறு பெயர்களில் உலா வருகின்றன. தமிழ் மக்களுக்கே தன் சொத்து எது என்று அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றம் கண்டு விட்டது தமிழிசை என்றும் கூறலாம். பலர் தமிழிசை அழிந்துவிட்டது என்று கூறுகின்றனர். ஆனால் தமிழிசை திரிந்து களவுப்போய் விட்டது என்பதே உண்மை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெரியபுராணத்தில் தமிழிசை...


(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

சேக்கிழார் பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தைப் பாடும் போது 41 பாடல்களால் அவர் பாடும் இசை முறையைக் கூறுகிறார். அங்கு இசை இலக்கணச் செய்திகளைக் கூறியுள்ளார்.

1) ஆரோகணம் (ச ரி க ம ப த நி ச) என்பதனை ஆரோசை என்றும், அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதனை அமரோசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2) குழல் துளைகள் மேல் விரல்களை மென்மையாக அசைத்தும், வழுக்கியும், தழுவியும், வண்டு மலர்மேல் அசைதல் போல் அசைத்தும் பல்வேறு உள்ளோசைகளை எழுப்ப வேண்டும்.

3) ஆனாயர் முல்லைப் பண்ணை முறைமை வழுவாது இசைத்தார். இசை பண்ணாகும் நிலையை இதன் மூலம் விளக்குகிறார் ஆனாயர். எல்லாச் சுரத்தானங்களையும் நன்கறிந்து அவை முறையாக ஒலி காட்டுகின்றனவா என்பதனை அறிந்து இசைக்க வேண்டும்.

4) பண்ணமைப்பு முறையில் மந்தரம், மத்திமம், தாரம் ஆகியவையும் வலிவு, சமம், மெலிவு ஆகிய பண்ணமை இடங்களும் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு ஆகிய பாடல்வகைகளும், பாணி, தூக்கு, நடை ஆகிய தானத் தொடர்பான விளக்கங்களும் உள்ளன.

5) குழலைப்பற்றி மிகவிரிவாகக் கூறுகிறது இப்பகுதி. துளை இடும் முறை, நுட்பமான இசை எழுப்பும் முறை, திருவைந்தெழுத்தை இசைத்து, இசை நிகழ்வைத் தொடரும் முறை போன்றன கூறப்பட்டுள்ளன.


நன்றி...    www.tamilvu.org





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS